கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் அதிகரித்து வரும் உடல்நிலைக் குறைபாடுகளில் ஒன்று ஆண்களிடையே உள்ள மலட்டுத் தன்மை ஆகும். இது பெரும்பாலும், 29 முதல் 35 வயதினரிடையே அதிகளவில் காணப்படுவதாக நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் மீனாட்சி தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை நோவா ஐவிஐ கருத்தரிப்பு நிபுணர் மருத்துவர் மீனாட்சி மேலும் கூறியதாவது:-

“கோவையில் தற்போது ஆண்மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 29 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களிடம் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. ஆண் மலட்டுத்தன்மை பரம்பரை அடிப்படையில்வரக் கூடும். தொற்று, விதைப்பையில் காயம் உள்ளிட்ட சில மருத்துவக் காரணங்களாலும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும்.
வயது, ஊட்டச்சத்து குறைபாடு, முறையான உடற்பயிற்சி இன்மை, வேலை பளு மற்றும் மன அழுத்தம், சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏற்படும் தாக்கம் போன்ற வாழ்க்கை முறை காரணங்களும் ஆண்களிடம் மலட்டுத்தன்மை ஏற்படக் காரணமாக அமைகின்றன.
புகைபிடிக்கும் பழக்கம், சட்ட விரோத போதை மருந்து பயன்பாடு, மதுப்பழக்கம், உடல் பருமன், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) உள்ளிட்டவையும் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.
தற்போது மருத்துவ ஆய்வு முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் சிறிய காரணிகள் கூட தெளிவாக கண்டறியப்படுகிறது. இது முன்பு சாத்தியம் இல்லாமல் இருந்தது. பெண்ணை மட்டுமே நிரந்தரமாக குறை கூறாமல் பாதிப்பு உள்ள சரியான நபருக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த பரிசோதனை முறைகள் உதவுகின்றன.
மலட்டுத் தன்மை மற்றும் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் சரியான உதவியை நாடவேண்டியது அவசியம்” என்றார்.